இனி என்ன?
பூமியின் தென்துருவமான அன்டார்டிக், புவிக்கோளத்தின் 20% பரப்பை உள்ளடக்கிய பெரும்பரப்பு. உறைபனிப் போர்வையும், பல்லாயிரக்கணக்கில் மிதக்கும் பனிப்பாறைகளும் காணக்கிடக்கும் இந்தக் கடல்பகுதியில் தற்போது வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.1958-இல் இருந்த வெப்பத்தைக் காட்டிலும் தற்போது இருமடங்கு அதிகமாகிவிட்டது. 2.24 டிகிரி கூடியுள்ளது. இதனால் பனிப்போர்வைக்கு அடியில் பிளவுகள் ஏற்படத் தொடங்கிவிட்டன.
கடந்த ஜூலை மாதம், அன்டார்டிக் பனிப் போர்வைக்கு அடியில் மிகப்பெரிய பிளவு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதாவது 1.5 கிலோ மீட்டர் ஆழம், 10 கிலோ மீட்டர் அகலம், 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தப் பிளவு இருக்கிறது. கடலுக்குள்ளான மாற்றத்தை ராடார் உதவியுடன் ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள் இவற்றை மிகத் துல்லியமாக தெரிவித்துள்ளனர்.
இந்தப் "பெரும்பள்ளம்' அல்லது பெரும் பிளவினால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப பனிப்போர்வை கரைந்து உருகும் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், "நிச்சயமாக இதனால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படும்' என்றும், "கடல் நீர்மட்டம் உயர்ந்து பல தீவுகள் மூழ்கிப்போகலாம், சில கடலோர நகரங்களையும் கடல் விழுங்கும்' என்கிறார்கள். ஆனால், அது இப்போது நடக்காது. சில தலைமுறைகள் ஆகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பசிபிக் பெருங்கடல் மற்றும் தெற்குக் கடலில் ஏற்பட்டுள்ள வெப்பக் காற்றின் காரணமாகத்தான் அன்டார்டிக் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், இந்த நிலைமைக்குக் காரணம் மனிதர்களின் தவறுகளா? என்று கேட்டால் மழுப்புகிறார்கள். அப்படியும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்பதுதான் அவர்களது பதில்.
இங்கே ஆராய்ச்சிக்கூடங்கள் அமைத்திருப்பதும், அதிநவீனக் கருவிகள் கொண்டு ஆய்வுகள் செய்வதும் அமெரிக்கா, ரஷியா, கனடா, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள்தான். வளர்ந்த நாடுகளின் விஞ்ஞானிகள் தங்கள் நாட்டைக் காட்டிக்கொடுப்பார்களா?
புவிவெப்பம் அதிகரிக்கக் காரணம் வளர்ந்த நாடுகளின் சுயநலத்தால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள்தான். புவிவெப்பம் உயர்வதை 2 சென்டிகிரேட் அளவுக்கும் கீழாக, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், வளர்ந்த நாடுகள் தங்களது கரியமிலவாயு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், அவர்கள் அந்தச் சுமையை வளரும்நாடுகள் மேல் போட்டுவிட்டு, அன்டார்டிகாவில் ஆராய்ச்சி செய்கிறார்கள். நம்மை அச்சுறுத்துகிறார்கள்.
புவிப்போர்வையைப் பாதிக்கும் கரியமில வாயுவைக் காட்டிலும், மிக மோசமானது மீதேன் வாயு. இந்த மீதேன்வாயு வேளாண்மையில்தான் அதிகமாக வெளிப்படுகிறது. குறிப்பாக நெல் சாகுபடியில்! கொதுமையில் அல்ல ஆகவே வேளாண்மையில் சில கட்டுப்பாடுகளை விதித்து, புவிவெப்பத்தைக் குறைக்கலாம் என்று (ஒநாய்கள் அழுகின்றன)வளர்ந்த நாடுகள் கூறியதை உலகின் எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு இந்தியா உள்பட வளரும் நாடுகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும்கூட, இந்த முடிவைக் கைவிடாமல், அடுத்த கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள்.
இதற்கிடையில், அரிசி சாப்பிடும் ஆசிய நாடுகளின் உணவுத்தட்டுப்பாட்டை நீக்க ""அரிசிக்கு மாற்றாக உருளைக்கிழங்குதான் மிகநல்ல உணவு; இதற்குத் தண்ணீர் தேவை மிகவும் குறைவு'' என்று ஐரோப்பாவில் நடந்த உருளைக்கிழங்கு மாநாட்டில் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.அடுத்த எட்டு ஆண்டுகளில் கரியமில வாயு குறைப்புக்கான எந்தவித சரியான திட்டமும் இல்லாமல், போதிய நிதியையும் ஒதுக்காமல், புதிய தொழில்நுட்பங்களையும் வழங்காமல் இன்னமும் பேசிக்கொண்டே இருக்கின்றன வளர்ந்த நாடுகள்.
இது ஒருபுறம் இருக்க நம்முடைய கவலையெல்லாம் கங்கை நதிக்கு மூலாதாரமாகிய கங்கோத்ரி வேகமாக உருகத் தொடங்கிவிட்டது; யமுனை நதிக்கு ஆதாரமான கோமுக் பனிச்சிகரம், தனது "பசுமுகத்தை' இழந்துவிடும் அளவுக்கு உருகிவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுதான். கடந்த பத்து ஆண்டுகளில் இவ்வாறு இருசிகரங்களும் வேகமாகக் கரைவது அதிகமாகிவிட்டது.
உலகளாவிய புவிவெப்பம் இமாலயத்தையும் பாதிக்கிறது. வளர்ந்த நாடுகளின் சுயநலத்துக்கு எங்கோ இருக்கும் கங்கோத்ரியும் கோமுக் சிகரமும் வேகமாகக் கரைகின்றன. அன்டார்டிக் பனிப் போர்வைக்கு அடியில் உறைந்த கடல் பாளம் பாளமாகப் பிளந்து நிற்கிறது. கடல்காற்று வெப்பமாகிறது. பருவமழையை பெரும் புயல் விரட்டுகிறது.
உலகத்தில் ஏதோ ஒரு நாடு, சுற்றுச்சூழலுக்கு எதிராக எதையோ செய்கிறது என்று சும்மா இருக்க முடியாது. அதனால் புவி முழுவதையும் பாதிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த இயற்கை மகத்தானது. தன்னைச் சீர்குலைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினையை முன்வைக்கிறது. "நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே' என்று சொல்லும் சக்தி படைத்த இயற்கை மனிதருக்குச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால் மனிதனோ, ""நான்'' எனும் அகந்தையை நடத்துவோனாகவே நீடிக்கிறான்.
அனுபவிப்பதுவரை அனுபவித்துவிட்டு நாம் போய்விடுவோம், வருங்கால சந்ததியினர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று நாம் வாளாவிருந்துவிட முடியாது. நமது முன்னோர்கள் நாம் சந்தோஷமாக வாழ மாசுபடாத பூமியை விட்டுச் சென்றனர். நாமும் நமது சந்ததியினருக்கு மாசுபடாத பூமியை விட்டுச் செல்வதுதானே நியாயமாக இருக்கும். நாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய இன்றியமையாத பிரச்னை இது!
No comments:
Post a Comment